logo
திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

12/Jul/2021 01:02:19

புதுக்கோட்டை, ஜூலை: திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து முழுமையாக இயக்கப்படவில்லை. ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பயணிகள் முன்பதிவு டிக்கெட் எடுத்தால் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் தற்போது நடைமுறையில் உள்ளது. தெற்கு ரயில்வேயில் ஒரு சில பாசஞ்சர் ரயில்களில் மட்டும் வழக்கமான முன்பதிவில்லா டிக்கெட் நடைமுறை உள்ளது.

ரயில்களில் அன்றாடம் பயணிக்க கூடிய பயணிகளுக்கு வசதியாக சீசன் டிக்கெட் வழங்கும் முறை உள்ளது. இதில் குறிப்பிட்ட தூரங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் பெட்டியிலும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட்டுகளுக்கு தனி கட்டணமாகும்.

இந்த நிலையில், புதுக்கோட்டை வழியாக திருச்சி-ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டன. தற்போது இந்த ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து தினமும் பணியின் காரணமாக காரைக்குடி, சிவகங்கை, மானாமாதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருபவர்கள் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு சீசன் டிக்கெட் எடுத்து வைத்து பயணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது சிறப்பு ரயிலாக முன்பதிவு டிக்கெட் மட்டுமே இருப்பதால் பயணிகள் தினமும் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பலர் சிரமம் அடைந்து வருகின்றனர்.

திருச்சி-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறிப்பிட்ட பெட்டிகளை முன்பதிவில்லா டிக்கெட் கட்டணத்திற்கு ஒதுக்க வேண்டும். மேலும் இந்த ரயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் வழங்க வேண்டும் என புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளனர். இதனால் ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Top