08/Jul/2021 11:35:46
ஈரோடு, ஜூலை: ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் முறைகேடாக சுங்க கட்டணத்தை இரு மடங்காக உயரத்தி வசூலிப்பதை தடுத்து நிறுத்தக்கோரி ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.
ஈரோடு ஆர்.கே.வி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி சந்தை கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக சந்தை கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்கள் வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், அருண் பிரசாத் என்ற இரு ஒப்பந்ததாரர்கள் கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தி வசூலிப்பதாக கூறி கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் புகார் மனு அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு புதுப்புது ஆட்களை வைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே வரவிடாமல் தடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும் திமுக பிரமுகரை கண்டித்தும் முறையான சுங்க கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டனர். திமுக பிரமுகர் குறிஞ்சி சிவக்குமார் தற்போது தமிழ்நாடு கேபிள் டிவி தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.