04/Jul/2021 10:12:44
புதுக்கோட்டை,ஜூலை: கோவிட் தொற்று நோயாளிகளுக்கு நடைப் பயிற்சி செய்யும் முறை கால அளவு அவற்றின் விதம் தொடர்பாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் உம்மல் கதீஜா மற்றும் கோவிட் சித்த மருத்துவ சிகிச்சை மைய நோடல் அலுவலர், மருத்துவர் ஆ.மாமுண்டி ஆகியோர் கூறியதாவது:
கோவிட் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறைப்படி அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், தாளி சாதி சூரணம், பிரமானந்த பைரவ மாத்திரை, ஆடாதொடை, மணப்பாகு, கபசுர குடிநீர், கிராம்புகுடிநீர்,
ஓமக்குடிநீர் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள், மூலிகை தாம்பூலம்,புற மருத்துவமாக 8 வடிவ நடை பயிற்சி, மூலிகை தூபம், ஓமப்பொட்டணம், திருமூலர் பிராணயாமம், சுயவர்ம பயிற்சி யோக முத்திரை பயிற்சி போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நடைப் பயிற்சி செய்யும் முறை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நடைப்பயிற்சி செய்யும் நேரம் காலை மாலை என இரண்டு வேளையும் நன்றாக தளர்வான ஆடைகள் உடுத்தி கொண்டு இரண்டு கால்களின் இயக்கமும் ஒரே சீரான வேகத்தில் இருக்குமாறு நடக்க வேண்டும். இரவு உணவு உண்ட பின் குறு நடை செய்ய வேண்டும். உச்சி வெயிலில் நடைப் பயற்சி செய்ய கூடாது.
காலை நடைப்பயற்சி செய்யும் போது உடலின் அனைத்து மூட்டுகளும் இயல்பான நிலைக்கு ஏற்றவாறு பலப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறுகின்றது.
நடைப் பயிற்சி செய்வதால் உண்டாகும் வியர்வை
வெளியேற்றப்படுவதன் மூலம்
வியர்வை துவாரங்களில் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.மேலும் நடைப்பயிற்சி செய்யும் மனிதர்கள் உடல் இளமையோடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
என்றனர்.
சித்த மருத்துவர்கள் சரவணன், பத்மாவதி, கீதா
ஆகியோர் கொண்ட மருத்துவ குழு கொரோனா சிகிச்சை பெறும் நபர்களுக்கு இந்தப்பயிற்சிகளை
தினமும் அளித்து வருகின்றனர்.