02/Jul/2021 03:47:58
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டையில் ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெரு வியாபாரிகள் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் எம். என். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் கே ஆர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோரிக்கைகள்: 2014-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டத்தின் 7-2015- இன் படி அமல்படுத்தப்பட வேண்டும். சட்டப்படியான பயன்கள் தெரு வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டும்.
கொரானா தொற்று பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் அவல நிலையை பரிசீலித்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருக்கிற நிலையில் முன்பு வியாபாரம் செய்த இடங்களிலேயே தெரு வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வியாபார சான்று மற்றும் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும். வியாபார சான்றிதழ்களை சட்டப்படி ரூ 100 கட்டணத்தில் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும்.
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி அடையாள அட்டை உள்ளவர்களை வாக்காளர்களாக கொண்டு வணிக குழுவிற்கு தேர்தல் நடத்த வேண்டும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து வணிக குழு செயல்பட உள்ளாட்சி அலுவலகங்களில் இடம் மற்றும் உரிய பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
சட்டத்திற்கு விரோதமாக டெண்டர் விட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் வரி வசூலிப்பதை கைவிட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகமே நேரடியாக வரி வசூல் செய்ய வேண்டும். நகர்புற மேம்பாட்டு திட்டப்படி தெரு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான திட்டங்கள் இருந்தும் இதை முறையாக அமுல்படுத்தவில்லை.
தெரு வியாபாரிகள் தனியார் மற்றும் கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க வங்கிக் கடன்கள் வழங்க வேண்டும். முறையாக திரும்ப வசூலிக்கும் ஏற்பாடும் செய்து நிரந்தர பயன் அடைவதற்கான திட்டமாக செயல்படுத்திட வேண்டும் .
உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாலையோர வியாபாரிகள் சட்ட விதிகள் துணை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை ரத்து செய்து முறையாக அறிவித்து கருத்துகளைக் கேட்டு துணை விதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது