24/May/2021 01:02:35
புதுக்கோட்டை, மே: கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சைக்கு உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயாளிககளை அதிகம் தாக்கும் தொற்றாக உருவெடுத்துள்ளது. ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த தொற்று ஏற்படுவதாகவும், எச்ஐவி / எய்ட்ஸ் போன்ற வைரஸ் தொற்று மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் களை அதிகம் தாக்குவதாக கூறப்படுகிறது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் ஒரு சிலர் மியூகோர்மைக்கோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு
கண்ணிலும் கண்ணைச் சுற்றியும் கடுமையான வலி,
காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி, மனச்சிதைவு
போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
எனவே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மேற்கொண்ட நோய் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.