logo
பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்தி வைப்பு- முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்

பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்தி வைப்பு- முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்

29/Sep/2020 12:49:55

 தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அதை மேலும் தளர்வுகளுடன் நீட்டிப்பது, கரோனா நோய்த் தொற்றின் நிலவரம் பற்றியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து, மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்

முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அக்.1-ஆம் தேதி முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்

இந்த ஆலோசனைக் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, கரோனா நோய்த் தொற்றுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Top