14/May/2021 08:41:38
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 225 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும்
வேகம் எடுத்துள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த அரசு
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து
வருவதால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி. முழு ஊரடங்கின் போது
தேவையில்லாமல் வாகனங்களில்
வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் மாவட்டம் முழுவதும்
உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளில் போலீசார்
உஷார்படுத்தப்பட்டு தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதைப்போல் கூடுதலாக 42 இடங்களில் சோதனை
சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பிக்கள்
தலைமையில் இன்ஸ்பெக்டர்கள்
சப்-இன்ஸ்பெக்டர்கள்
உள்பட மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுகின்றனர். எனினும்
முழு ஊரடங்கு போட்ட நாள் முதல் இன்று வரை ஈரோட்டில் சர்வசாதாரணமாக மக்கள் நடமாடி வருகின்றனர். குறிப்பாக
வாகனங்கள் வழக்கம் போல் இங்கு வருகின்றன.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் போக்குவரத்தை தடுக்கும் பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் அளவுக்கு வாகன நெரிசல் இருந்து வருகிறது. போலீசார் வெளியே சுற்றும் அவர்களை பிடித்து விசாரித்தால் ஏடிஎம் போகிறேன், பாட்டிக்கு மருந்து வாங்கப் போகிறேன், தடுப்பூசி போடப் போகிறேன், என்று ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி போலீசாரை ஏமாற்றி செல்கின்றனர்.
எனினும் ஊரடங்கி மீறி கடை திறந்து வைத்தவர்கள், முக கவசம் அணியாதவர்கள் மாவட்டம் முழுவதும்
கடந்த 4 நாட்களாக ஊரடங்கை மீறியதாக 225 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அத்திவாசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு அவர்களது வாகனங்களையும்
பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதியில், பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, ஜிஹெச் ரவுண்டானா, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர், பஸ் நிலையம் போன்ற பகுதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.