19/Apr/2021 01:16:33
ஈரோடு, ஏப்: கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தூரம் வரை ரூ.740 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க அரசு திட்டமிட்டு இதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், கீழ் பவானி பாசன வாய்க்காலின் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் தலைமையில் விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில், கீழ் பவானி பாசன வாய்க்கால் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.