logo
ஈரோடு மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில்  23 தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகள் உள்ளன: ஆட்சியர் கதிரவன்  தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் 23 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன: ஆட்சியர் கதிரவன் தகவல்

12/Apr/2021 11:53:19

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் 23 தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகள் தீவிர கண்காணிப்பில்  உள்ளதாக ஆட்சியர் சி.கதிரவன்  தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் ஆகியோர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கலெக்டர் கதிரவன் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதமும், சீல்  வைத்து வருகிறார்.  

அதன்படி, திங்கள்கிழமை  மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் அதிகாரிகள், சூரம்பட்டி நால்ரோடு, பெருந்துறை ரோடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட் டது.மேலும் சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சியர் சி. கதிரவன்  கூறியதாவது: வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து  திடீர் ஆய்வு மேற்கொண் டோம். அப்போது விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஒவ்வொரு மக்களும் பொறுப்புடன் செயல்பட்டு முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பெருந்துறை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முழு நேர கொரோனா மருத்துவமனை யாக  மாற்ற பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான ஆக்சிஜன், மருந்து, போதுமான அளவு டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் பேர் தங்கும் அளவுக்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.


 ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 23 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான காய்கறி உள்பட  அனைத்து அத்தியாவசியப் பொருள்களும்  கிடைக்கும் வகையில்  பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு   காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்றார்  அவர்.

Top