logo
திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

07/Mar/2021 01:43:53

புதுக்கோட்டை, பிப் : புதுக்கோட்டை, திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் கோயில் வாசலில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் மாசி பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி  21-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 28.2.2021 -ஞாயிறு இரவு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முத்துமாரியம்மன்அம்மன்  வீதிஉலா நடைபெற்றது பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி விரதமிருக்கும்  சற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள்  ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் யாத்திரையாக கோயிலுக்குச்சென்று  கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த அக்னி பாதையில் நடந்து சென்று அம்மனை வழிபட்டனர்.

நாளை (மார்ச்-8) தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற நாளை   (8.3.2021) திங்கள்கிழமை    நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். மாசித்திருவிழா 16.3.2021 -ஆம் தேதியுடன்  நிறைவு பெறுகிறது.   ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.  

Top