logo
  48-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள  புதுக்கோட்டை மாவட்டம்..  எம்பி தொகுதி திரும்பக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்  மாவட்ட மக்கள்

48-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள புதுக்கோட்டை மாவட்டம்.. எம்பி தொகுதி திரும்பக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மாவட்ட மக்கள்

19/Jan/2021 09:57:34

புதுக்கோட்டை, ஜன: ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து 1974-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தமிழகத்தின் 15-ஆவது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4 ஆயிரத்து 663 சதுர கிலோ மீட்டர். தற்போது 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16.18 லட்சம் பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி என்று 6 சட்டப்பேரவை  தொகுதிகள் உள்ளன. புதுக்கோட்டை, அறந்தாங்கி என்று 2 நகராட்சிகளும், புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் என்று 3 வருவாய் கோட்டமும், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி என்று 8 பேரூராட்சிகளும், 

மணமேல்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், குளத்தூர், கறம்பக்குடி, விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டை ஆகிய 12 தாலுகாக்களும் உள்ளன.

அன்னவாசல், அரிமளம், கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் என்று 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேலும் 42 பிர்காக்கள், 763 கிராமங்கள், 497 ஊராட்சிகள் என்று பெரிய மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இங்கு உலகப் புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு அமைந்துள்ள குடுமியான்மலை, ஓவியத்திற்கு பெயர்பெற்ற சித்தன்னவாசல், மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயில், திருமயம் கோட்டை என்று ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. புதுகை மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயே மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் வெட்டப்பட்டன. இதில் கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயிகள் விவசாயத்துக்கும், பொதுமக்கள் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர்.

மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னியாறு, பாம்பாறு, அம்புலி ஆறு ஆகியவை ஓடுகின்றன. ஆனால் மழைக்காலங்களில் மட்டுமே ஒன்றிரண்டு மாதங்கள் இந்த ஆறுகளில் தண்ணீர் ஓடும். அதேநேரத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களில் கல்லணை காவிரி கால்வாய்களும் ஓடுகின்றன. இவற்றிலும் போதிய அளவு தண்ணீர் வராததால் விவசாய பரப்பளவும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. மாவட்டம் உதயமாகி 47 ஆண்டுகள் கடந்தும்  பழமை மாறாமல் அப்படியே உள்ளது. இன்னும் எந்த வளர்ச்சியும் பெறவில்லை என்று மாவட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தீவிர முயற்சியின் காரணமாக  புதுக்கோட்டைக்குஅரசு மருத்துவ கல்லூரி கிடைத்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ- வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்துவின் தீவிர முயற்சியின் காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருமயம் தொகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை ஒரளவு குறைந்துள்ளது. 

ஆனால், மாவட்டத்தில் கடல் குடிநீர் ஆக்குவது கானல் நீராகி இருந்து கொண்டிருக்கிறது.  நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் பெருகியதை தடுத்து நிறுத்தாதது  ஷேர் ஆட்டோ அல்லது சென்னையை போல் மினி பஸ் இயக்குதல் போன்றவற்றை நீண்டகாலமாக மாவட்ட மக்கள் கோரிக்கையாக இருந்தாலும் அதனை  எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தது தான் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் ஏமாற்றமாகும். மாவட்டத்தை நினைவூட்டும் வகையில் உருவான நினைவு தூண் தற்போது மினி பாராகவும்  சமூக விரோதிகளின்  பொழுது போக்கு இடமாகிப் போனதுதான் வேதனை என்கின்றனர் நகர மக்கள்.



கண்ணன், காமராஜபுரம்: எனக்கு நினைவு தெரிந்து 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே புதுக்கோட்டை நகரம்தான் இப்பவும் உள்ளது. நான்கு திசைகளிலும் உள்ள 16 வீதிகள் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. கட்டடங்கள்தான் பெருகியுள்ளன. நூற்றாண்டு கண்ட நகராட்சி என்று சொல்கின்றனர். அனைத்து சாலைகளிலும் நடை பாதை ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது சாலைகள்  மோசமாக   உள்ளன. புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.


செந்தில், மச்சுவாடி: 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் எங்கள் பகுதி உள்ளது. ஆனால் மக்கள் தொகை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வீடுகள் பெருகி வருகின்றன. இதற்கேற்ப அடிப்படை வசதிகள் மட்டும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.


அடைக்கலம், ராஜகோபாலபுரம்: எங்கள் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுதான் கொஞ்சம் நவீனமாகியுள்ளது. கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேடைகள் சேதமடைந்துள்ளன. குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை. ரயிலில் வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்கோ, நகரின் பிற பகுதிகளுக்கோ செல்ல வேண்டுமானால் ஆட்டோவில்தான் பயணம் செய்ய முடியும். பஸ் வசதி கிடையாது. ரயில் வரும் நேரங்களில் பேருந்துகளை சரி வர இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து:  உயர்மின் கோபுர விளக்குகள் நிறுவப்பட்டும் அதனை சரிவர பராமரிப்பின்றி போய் கொண்டிருப்பதால் பாதி நாட்கள் விளக்குகள் எரிவது கிடையாது.பூங்காக்கள் வேலிக்கருவைகள் வளரும் இடமாக மாறியுள்ளளன.

கோபால் விவசாயி: மாவட்டத்தில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.  கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் முந்திரி அதிக அளவில் விளைகிறது. முந்திரி தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாக ஏராளமானோரும் பயனடைவர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம்.

சுசீலா, பாலன் நகர்:  பேருந்து  நிலைத்தில் இருந்த எங்கள் பகுதிக்கு வர ஆட்டோவில் 150 முதல் 200 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். மற்ற நகராட்சிகளில் ஷேர் ஆட்டோ இயக்கப்படுகிறது. ஆனால் நூற்றாண்டு கண்ட நகராட்சியில் ஷேர் ஆட்டோ, உள்வட்ட சுற்று பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை. நகரின் முக்கிய இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் வசதி செய்ய வேண்டும். கருவேப்பிலான், திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

மகாத்மா ரவிச்சந்திரன் கல்வியாளர்:  மாவட்ட  உதயமான  நாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள், கலாசார போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்த முன் வர வேண்டும்.

எம்பி தொகுதியும் போச்சு:தொகுதி சீரமைப்பினால் , புதுகை எம்பி தொகுதியும் பறிபோனது. இதனால் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் அருகில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. அறந்தாங்கி தொகுதி மக்கள் கோரிக்கைகளுக்காக தங்கள் எம்பியை சந்திக்க  சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தஞ்சை- புதுக்கோட்டை, அறந்தாங்கி- புதுக்கோட்டை-மணப்பாறை போனற ரயில்வே திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாதது. பெல் தொழிற்சாலை தவிர குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் எதுவும் வராதது போன்றவைகளால் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Top