logo
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

25/Dec/2020 12:50:58

சென்னை: ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல், 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தலாம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஜூலை மாதத்திற்கு பின் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, அத்தியாவசிய பணிகள் அனைத்திற்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி, ஜல்லிக்கட்டு போட்டகளை நடத்துபவர்கள், மாடுபிடி வீரர்கள் என அனைவரிடமும் இருந்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொது மக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப (மொத்த அளவு) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை (தெர்மல் சோதனை) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. 

இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Top