logo
இன்றைய சிந்தனைக் கதை- பதற்றம்  வேண்டாம்.. தன்னம்பிக்கை வேண்டும்.. வெற்றி உங்களுக்கே..

இன்றைய சிந்தனைக் கதை- பதற்றம் வேண்டாம்.. தன்னம்பிக்கை வேண்டும்.. வெற்றி உங்களுக்கே..

08/Dec/2020 09:03:12

ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது.. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்குள் சென்றது.. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது.. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது.. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது.. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடனே தன் குட்டிகளிடம் சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும்.. எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கக்கறி வேண்டும் என்று கத்துங்கள் என்று சொன்னது..

சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டிகள் கத்தியது.. குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்டது.. தம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து சிங்கம் ஓட்டமெடுத்தது..

ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து..ஏன் ஓடுகிறீர்கள் ? என்று கேட்க..என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. அவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது என்று சிங்கம் சொன்னது.அதைக் கேட்ட நரி, வேறு மிருகங்கள் இல்லை, மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள்.. குட்டிகளை நான் சாப்பிடுகிறேன் என்றது.

அதற்கு சிங்கம், சரி வருகிறேன்,  ஆனால் நீ ஏற்கெனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் என்று சொல்லி, அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக, கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே,  இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம். அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளார். நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வருவார் என்று சொன்ன உடன்,அதைக்கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.

எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிடக்கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால், அதை நினைத்து கவலை படுவதாலோ, வருத்தப் படுவதாலோ, எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு தன்னம்பிக்கை வேண்டும்.பதற்றம் வேண்டாம்.வெற்றி உங்களுக்கே..


Top