logo
 உத்தரப்பிரதேசத்தில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மணல் லாரி கவிழ்ந்தது: 8 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மணல் லாரி கவிழ்ந்தது: 8 பேர் பலி

03/Dec/2020 10:02:31

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த கார் மீது, மணல் லாரி கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பியில் உள்ள தேவி கஞ்ச் சந்திப்பில், மணல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த லாரி திடீரென்று நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 8 பேர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், காருக்குள் சிக்கிய 2 பேரை போலீசார் கடும் போராட்டத்திற்கு இடையே மீட்டனர்.

இறந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்த உள்ளூர்வாசிகள் என்று கூறப்படுகிறது.7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே நேரத்தில் மாவட்ட மருத்துவமனையில் ஒரு பெண் சிகிச்சையின் போது இறந்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அம்மாவட்ட கலெக்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆரம்ப அறிக்கையின்படி, டயர் ஒன்று வெடித்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது எனத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Top