logo
கொடிவேரி அணை பாசன வாய்க்கால்கள் சீரமைப்புக்காக தண்ணீரை நிறுத்த விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்

கொடிவேரி அணை பாசன வாய்க்கால்கள் சீரமைப்புக்காக தண்ணீரை நிறுத்த விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்

23/Nov/2020 11:40:28

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து வெளியேறும் பாசனவாய்க் கால்களை சீரமைக்கும் பணிகளுக்காக விவசாயிகளிடம்  கருத்து கேட்பு கூட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

கொடிவேரி அணைபாசன திட்டத்திற்குட்பட்ட தடப்பள்ளிமற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலை புதுப்பித்து நவீனப்படுத்தும்   திட்டத்திற்கான பணிகளை செய்வதற்கு அரசு ரூ.144 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீரமைப்புபணிகளுக்காக வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரைநிறுத்த வேண்டுமென பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து, பாசனப் பகுதிகளில் உள்ள 21 விவசாய கிளைச் சங்கங்களின் உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 500 -க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களிடையே   தலைவர் சுபி.தளபதி  பேசுகையில், வாய்க்கால் கரைகள் மற்றும் மதகுகளை சீரமைக்க அரசு ஒதுக்கியுள்ள நிதியை சரியான நேரத்தில் பயன்படுத்தி பயன்பெற அனைத்து விவசாய சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 மேலும் வாய்கால்களில் அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள் மதகுகள் படித்துறைகள் கிளை வாய்க்கால் பிரிவுகள் மற்றும் மழைநீர் போக்கிகள் உள்ளிட்டவற்றை சரியான இடத்தில் அமைக்கவும் பணிகள் முறையாக நடைபெறும் விவசாயிகள் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தபணிகளை தற்போது நடைபெற்று வரும் முதல் போக பாசனம் முடிந்த பிறகு வாய்க்கால்களை குத்தகைதாரர்களுக்கு ஒப்படைக்கலாமா அல்லது இரண்டாம் போக சாகுபடி முடிந்த பின்னர் ஒப்படைக்கலாமா என்றும் விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

 மேலும் இரண்டாம் போகம் முடிந்த பிறகு வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டால் அடுத்தாண்டு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனால் தற்போதுநடைபெற்றுவரும் முதல் போகசாகுபடி முடிந்தவுடன் ஒருபோக சாகுபடியை கைவிட்டு விட்டு வாய்க்கால்களின் மேம்பாட்டுப்பணிக்காக 4 மாதங்கள் தண்ணீரை நிறுத்தி வைக்கலாம் என பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்தனர் ஆனால் இந்தகருத்துக் கேட்பு கூட்டத்தில்  இறுதியான முடிவெடுக்கப்படாததால் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Top