logo
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்ப்பட அதிபர்கள் சங்கத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்ப்பட அதிபர்கள் சங்கத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

22/Nov/2020 03:52:25

சென்னை: பல்வேறு  பிரச்னைகளைச் சந்தித்ததமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னையில் இன்று   விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 4 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1,303 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளை (23ம் தேதி) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும்.அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர தலைவர் பதவிக்கு பி.எல்.தேனப்பன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில், ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகிறார்கள். 


Top