logo
மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும்- பாஜகவுடனான கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும்- பாஜகவுடனான கூட்டணி தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

22/Nov/2020 03:44:38

சென்னை: அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா கூட்டணி தொடரும், மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கம் திறப்பு விழா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் – II மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சிறந்த நிர்வாகம் மூலம் மத்திய அமைச்சர் அமித் ஷா தன்னை நிரூபித்துள்ளார். இளம் வயதில் உள்துறையை நிர்வகித்து வரும் அவர், ஆழ்ந்த அறிவு மற்றும் அனுபவத்துடன் நவீன உலகின் சாணக்கியனாக திகழ்கிறார். மத்திய அரசின் பல்வேறு சாதனைகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். எனவே பிரதமர் மோடியின் நம்பிக்கையானவராக திகழ்ந்து வருகிறார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவியேற்கும் பொழுது, நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து விட வேண்டும் என்று ஆணித்தரமாக கூறுவார்.அவர் கூறிய, இந்த சுந்தரச் சொற்களை, தாரக மந்திரமாகக் கொண்டு ஏழை, எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற எண்ணில்லாப் புதுமை திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியவர்  புரட்சித்தலைவி அம்மா.

எம்ஜிஆர் கூறிய அந்த வைர வரிகளை இதயத்தில் ஏந்தி, அம்மா காட்டிய வழியில் இம்மியும் பிசகாது நடந்து, மக்களுக்கான நலத்திட்டங்களை, அம்மா அரசு இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது என்பதற்கு சாட்சியம் தான், அம்மாவின் அரசு பெற்றுள்ள இத்தனை தேசிய அளவிலான விருதுகளும் பாராட்டுகளும்,

மக்கள் எங்கள் பக்கம்: கடந்த 2011–ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அம்மா அரசு அனைத்து துறைகளிலும், ஏராளமான சரித்திர சாதனைகளைப் படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மா அரசு, கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி, கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத் திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. இதனை நாம் நன்றாக அறிவோம், அதனால்தான் தமிழக மக்கள் என்றும் எங்கள் பக்கம். நாங்கள் என்றும் மக்கள் பக்கம்.

இந்த சாதனைகளையெல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றார்கள்.ஆனால், எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள், ஆனால் பரிதவிக்கிறார்கள். அம்மாவின் அரசுக்கு, தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறதே என்று மனம் பதைபதைக்கிறார்கள். அதனால் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறை சொல்லுகிறார்கள், குற்றம் சொல்லுகிறார்கள்.

மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி: அம்மா வளர்த்த சிங்கங்கள்தான், அண்ணா தி.மு.க. தொண்டர்கள். சிங்கத்தின் குகையிலே வந்து, சிறுநரிகள் வாலாட்ட முடியாது. எனவே, தொடர்ந்து மூன்றாவது முறையும் நாங்கள் வெற்றி பெற்று முத்திரை பதிப்போம், வெற்றிக்கனி பறிப்போம். தேசிய அளவில் இந்தியாவை இன்றைக்கு வல்லரசு நாடக உருவாக்கி காட்டிய மகிழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி தலைமை தாங்கி நடத்தி கொண்டு இருக்கும் பிரதமர் மோடி இன்றைக்கு மிகவும் கடினமாக இந்திய திருநாட்டை நல்வழிபடுத்துவதற்கு ஆற்றலுடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.

இனி வருகின்ற தேர்தல்களில் அண்ணா தி.மு.க, பாரதிய ஜனதா வெற்றி கூட்டணி தொடரும் என்று இந்த கூட்டத்தின் மூலமாக தெரிவித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். கோவிட் 19–ஐ கட்டுப்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து திறம்பட செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Top