logo
தொடரும் ஊரடங்கு : தமிழகத்தில் அனுமதிக்கப்படும் தொழில்களின் விபரம்

தொடரும் ஊரடங்கு : தமிழகத்தில் அனுமதிக்கப்படும் தொழில்களின் விபரம்

02/May/2020 09:16:15

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் (மே 17 வரை) நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணிவரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அனுமதிக்கப்படும் பணிகள் குறித்த விவரம்:-

கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுபவர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுபவர்.

அச்சகங்கள் செயல்பட அனுமதி.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.

கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

பொதுமக்களுக்கான விமான, ரெயில், பேருந்து போக்குவரத்து. 

டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா.

மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.

இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top