23/Mar/2020 02:19:22
கொரோனா தடுப்புக்கான அவசர சிகிச்சை அளிக்க வசதியாக 4500 டாக்டர்களுக்கு ஓய்வு அளித்துள்ள தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஒன்பது
பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளின் எண்ணிக்கையும் 2069 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப்பணியில் உள்ள 25 சதவீத டாக்டர்களுக்கு அரசு ஒரு வாரம் விடுப்பு அறிவித்துள்ளது. டாக்டர்கள் ஒரு வார விடுப்பில் வீடுகளில் ஓய்வெடுக்கவும் கொரோனா தடுப்பு பணிக்கு எப்போது அழைத்தாலும் உடனடியாக வரும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 18 ஆயிரம் அரசு டாக்டர்களில் 4500 பேருக்கு ஒரு வார ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.