10/Aug/2021 12:40:44
ஈரோடு, ஆக: ஆரோக்கியமான குழந்தைகள் வளர கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகள் அவசியம் எடுத்துக் கொண்டு, குழந்தை பெற்ற பிறகு 2 ஆண்டுகள் தொடர்ந்து தவறாமல் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வார விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தினார்.
ஈரோடு மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வாரவிழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: குழந்தை பெற்றவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிறகு தொடர்ந்து 2 ஆண்டுகள் தவறாமல் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளும் தாய்பாலில் உள்ளது இதனை பெண்கள் உணர்ந்து கொண்டு கர்ப்பம் மற்றும் குழந்தை பெற்ற காலங்களில் செயல்பட வேண்டும் என பேசினார். தொடர்ந்து 5 கர்ப்பிணி களுக்கு சத்துகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
பிரசார வாகனம் மாவட்டம் முழுவதும் சென்று கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளும்.