04/Oct/2020 06:22:29
புதுக்கோட்டை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து சிறப்பு சிகிச்சை மையம் 12 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு ஏழு இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிக அளவு நடக்கிறது.விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது தாமதப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உயிரிழப்புகளை தடுப்பதற்காக சாலைகளில் விபத்துக் காய சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே முன்னோடி மற்றும் முன்மாதிரி திட்டமாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் போது உயிர் இழப்புகளை தடுப்பதற்காக விபத்து காயங்களுக்கான சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு தற்போது ஜெயலலிதாவின் கனவு நிறைவேற்றபட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 6 இடங்களில் விபத்து காயங்களுக்கான சிகிச்சை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதைத்தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூரில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 7-ஆவது மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் 24 மணி நேரமும் 4 மருத்துவர்கள் மற்றும் பத்து செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த மையத்தில் விஷ கடி பக்கவாதம் தீ விபத்து மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கும் சிறப்பாக முதலுதவி அளித்து உயிரை காப்பற்றும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.