logo
சென்னிமலையில் வேன் ஓட்டுனர்  மர்ம சாவு:  மனைவி -உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

சென்னிமலையில் வேன் ஓட்டுனர் மர்ம சாவு: மனைவி -உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

30/Jun/2021 10:08:52

ஈரோடுஜூன்: ஈரோடு மாவட்டம்சென்னிமலையில் வேன் ஓட்டுனர்  மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் குறித்து   அவரது  மனைவி, உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே உள்ள காவிரிபுரம் தெலுங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

குழந்தைவேல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நல்லமுத்தாம் பாளையத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குழந்தைவேல் தனது வீட்டில் மர்மமான முறையில் இருந்த கடந்தார். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தெலுங்கனூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது குழந்தைவேலுவின் உடலில் காயங்கள் இருப்பதை அவருடைய அண்ணன் மாதேஷ்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் குழந்தைவேலின்  சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னிமலை போலீசில் அவருடைய அண்ணன் மாதேஷ் புகார் அளித்தார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைவேலின் மனைவி தனலட்சுமி, அவர்களது உறவினர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைவேலு வீட்டுக்கு யார் எல்லாம் வந்து சென்றார்கள் என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, குழந்தைவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் மாதேஷ் புகார் செய்துள்ளார். குழந்தைவேல் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்ததும்  விசாரணையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றனர்.

Top