28/Jun/2021 04:15:29
புதுக்கோட்டை, ஜூன்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்திய மத்திய அரசைக்கண்டித்து சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கூட்டு எதிர்ப்பு இயக்க ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை நடைபெற்ற கூட்டு எதிர்ப்பு இயக்க ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலர் சி. அடைக்கலசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலர் சிற்பி உலகநாதன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நகரச்செயலர் அண்ணாதுரை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவ ஏ. பாவா, ஏ ஐ சி சி டி யு செயலாளர் ஏ. சாக்ரடீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோரிக்கைகள்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவற்றின் மீதான கலால் வரிகளை உடனடியாக குறைக்க
வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில்
விற்பதை தடுத்து தங்குதடையின்றி மக்களுக்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி
செய்ய வேண்டும்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதம்தோறும் ரூ. 7,500 உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
மத்திய தொகுப்பில் இருந்து ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்க வேண்டும் அத்தியாவசிய உணவுப்பொருள்களை இலவசமாக வழங்கிட வேண்டும். தடுப்பூசி இலவசமாக செலுத்துவதற்கு ஏற்ப தங்குதடையின்றி மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோ டெக் நிறுவனத்தில் குரானா தடுப்பூசி தயாரிப்பதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் கவிவர்மன் வி சிக மாவட்ட செயலாளர் செ.ப. பாவாணன், ஏஐ சிசிடியு மாவட்ட செயலாளர் சிவராஜ் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கே .ஆர். தர்மராஜன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுந்தரராஜன், எம். என். ராமச்சந்திரன், நகர துணை செயலாளர்கள் ஆர் ரமேஷ், மளிகை பாலு, ஏஐடியுசி நிர்வாகிகள் வீ சிங்கமுத்து, எம். பி. நாடிமுத்து, பி. பாண்டியராஜன். ஜி நாகராஜன், சிஐடியு மாவட்ட தலைவர் க. முகமதலிஜின்னா, செயலர் ஸ்ரீதர் உள்பட கட்சிகளின் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.