23/May/2021 03:56:45
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அதில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்றார்.
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனத்திலிருந்து கார் டயர் கழன்று சாலையில் ஓடியதாம். இதை எதிர்பார்க்காத கார் ஓட்டுனர் நிலை தடுமாறியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலை கீழாகக்கவிழ்ந்தது.
இந்த விபத்தில், காரில் பயணித்த அருள்தாஸின் மனைவி ஆரோக்கியமலர்விழி, இனிகோமேரி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தில் காயமடைந்த அருள்தாஸ் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மாத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணத்துக்குச்சென்றவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.