logo
டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே  திறப்பு..ஈரோட்டில் முதல் நாளில் ரூ.2.84 கோடிக்கு  மதுபானம் விற்பனை

டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே திறப்பு..ஈரோட்டில் முதல் நாளில் ரூ.2.84 கோடிக்கு மதுபானம் விற்பனை

08/May/2021 10:52:10

ஈரோடு, மே: டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே  திறக்கப்பட்டதால்  ஈரோட்டில் முதல் நாளில் ரூ.2.84 கோடிக்கு  மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில்  கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் டாஸ்மாக் கடைகளிலும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதன்படி டாஸ்மாக் பார்களில் அமர்ந்து மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 128 பார்கள் செயல்பட்டு வந்தன. பார்கள் இயங்க தடை விதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 128 பார்களும் மூடப்பட்டன. இதுபோல் பகல் 12மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கட்டுப்பாடுகள் காரணமாக இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை கடை பிடித்து விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி  முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடை இனி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலைமணி முதல்  பகல் 12 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது. இதனால் மது பிரியர்கள் காலை 8 மணி முதலே டாஸ்மாக் கடைக்கு வந்து தேவையான பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது.இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து 4 மணி நேரம் மட்டுமே இயங்கிய  டாஸ்மாக் கடைகளில் முதல்நாளில் ரூ .2 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரத்து 140-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளதாக டாஸ்மாக் மாவட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Top