logo
புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி:ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தம்-ரூ .200 கோடி மதிப்புள்ள துணிகள் தேங்கும் அபாயம்

புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி:ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தம்-ரூ .200 கோடி மதிப்புள்ள துணிகள் தேங்கும் அபாயம்

06/May/2021 01:44:07

ஈரோடு, மே:  கொரோனா புதிய கட்டுப்பாடுகள் எதிரொலியாக ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ரூ .200 கோடி மதிப்புள்ள துணிகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதி களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகிறது.


இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த 30 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வந்தது. அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டு அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வந்தது.

இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்து.கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிட்டு இயக்கப் படவில்லை. 

இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சுமார் 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.


இந்நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி  வியாழக்கிழமை  முதல் விசைத்தறிகள் உற்பத்தி நிறுத்தப்பட் டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது: இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏற்கெனவே கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் விசைத்தறி உற்பத்தியை  50 சதவீதமாக குறைத்து ஒரு ஷிப்டு முறையில் தான் இயக்கி வருகிறோம். இந்நிலையில்  வியாழக்கிழமை  முதல் மேலும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து எங்கள் குடும்ப உறுப்பினர்களை காக்கவும், தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நலன் காக்கவும் இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை முழுவதுமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தாலும், துணிகள் தேக்கமடைந்து வருவதாலும் உற்பத்தியை நிறுத்தி உள்ளோம். கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் நேற்று வரை ரூ. 200 கோடி வரை மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப் படும் எனவும் தெரிவித்தனர். 


Top