logo
இரு நாட்கள் விடுமுறை எதிரொலி... ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.10.77 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

இரு நாட்கள் விடுமுறை எதிரொலி... ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.10.77 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

01/May/2021 08:04:42

ஈரோடு, மே: இரண்டு நாட்கள் விடுமுறை எதிரொலி ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.10.77 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் முழு ஊரடங்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் கடந்த வாரம் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ. 10 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 128 பார்களுடன் இயங்கி வருகின்றன. தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் டாஸ்மாக் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக மூடப்பட்டு வருகிறது. அதேபோல் 128 பார்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது பார்கள் மூடப்பட்டதால் சில மது பிரியர்கள் மதுவை வாங்கிக் கொண்டு சாலையோரம் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் அமைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மே தினம் என்பதாலும், நாளை முழு ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று மாலை முதல் இரவு வரை வழக்கத்தை விட மதுப் பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பீர் வகைகளை மது பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ. 10 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 350 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்று தீர்ந்து உள்ளன. சாதாரண நாட்களில் ரூ.4  முதல் 5 கோடி வரை விற்பனையாகும். பண்டிகை காலங்களில் கூடுதலாக  மதுபானங்கள் விற்பனை ஆகும்.

Top