logo
நெசவாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி உறுதி

நெசவாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி உறுதி

27/Mar/2021 08:30:01

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்ட நெசவாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளர் சு.முத்துசாமி உறுதியளித்தார். 

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி, கூட்டணி கட்சியினருடன் இணைந்து, வீரப்பன்சத்திரம், சின்ன மாரியம்மன் கோவில் பகுதி என பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களிடம் சு.முத்துசாமி பேசியதாவது:

நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி ஏற்படுத்தப்படும். நெசவாளர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கி, அதன் மூலம் அரசின் சலுகைகள், உதவிகள் பெற்றுத்தரப்படும். இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை போன்றவை ஆண்டு முழுவதும் பணி கிடைக்கும் வகையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு உறுதியளிக்கிறோம்.

நெசவாளர்களுக்கு தடையின்றி நுால் கிடைக்க, அரசு மூலம் நுால் வங்கி ஏற்படுத்தப்படும். அரசு நுாலை உற்பத்தி செய்து அல்லது நுாலை கொள்முதல் செய்து, நெசவாளர் சங்கங்களுக்கு நுால் வழங்கப்படும். கைத்தறிக்கென தற்போது ஒதுக்கீடு செய்யப்படும் துணி ரகங்களின் பட்டியல் மறுசீராய்வு செய்யப்படும். அதுபோல, விசைத்தறிகளுக்கு தனி ரகங்கள் ஒதுக்கீடு செய்து, அத்தொழில் மேம்பாடு அடைய உதவுவோம்.

ஜவுளித்துறையை மேம்படுத்த தனி ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். விசைத்தறிக்கு இலவச மின்சாரம் இரண்டு மாதத்துக்கு, 1,000 யூனிட் என்ற அளவில் வழங்க பரிசீலிக்கப்படும். விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும்.

நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம், 12 சதவீத வட்டியில் வழங்கப்படும் கடன், 8 சதவீத வட்டியாக குறைக்கப்படும். இவை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நிறைவேற்ற, எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து  வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.


Top