09/Mar/2021 05:54:05
சென்னை, மார்ச்: அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நேற்று இணையத்தில்அதிக அளவில் செய்திகள் பரவி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2016 சட்டசபை தேர்தலை போலவே திமுகவிற்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர அதிமுக திட்டமிட்டுள்ளது.
அதற்காக இந்த முறை அதிமுக மிகவும் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளது. பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23, தேமுதிகவுக்கு 15...? இடங்கள் ஒதுக்கி மிகப்பெரிய கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்- இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நேற்று இணையத்தில் அதிக அளவில் செய்திகள் பகிரப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான 50 சதவீதம் வேட்பாளர்களை போட்டியிட வைக்க வேண்டும் என்று முயற்சி செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவருவதாகவும் இதனால் வேட்பாளர் தேர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. சில செய்தி ஊடகங்கள் கூட இதே செய்தியை வெளியிட்டன.
ஆனால் உண்மையில் அதிமுகவில் தலைவர்களுக்கு இடையே இப்படி கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை, முக்கியமாக ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும் வேட்பாளர் தேர்வில் எல்லா கட்சியிலும் நடப்பது போலவேதான் அதிமுகவில் ஆலோசனைகள் நடைபெறுகிறது. இயல்பான, ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே நடக்கின்றன. இதில் புதிதாக கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.