25/Feb/2021 10:39:03
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா (25.02.2021) வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புராணப் பெருமை வாய்ந்த திருத்தலம் ஆகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும். வரலாற்று பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலின் திருப்பணிகள் பல்வேறு உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, அருள்மிகு வினாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி இராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, மத்திய மண்டல திருச்சி சரக காவல்துறை தலைவர் எச்.எம் ஜெயராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், இந்துசமய அறநிலையத்துறை இணைய ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சுரேஷ், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.பழனியாண்டி, அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளை பெற்றுச் சென்றனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.