logo
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதியளித்ததைக்கண்டித்து தனியார் மருத்துவர்கள் வாகன பேரணி

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதியளித்ததைக்கண்டித்து தனியார் மருத்துவர்கள் வாகன பேரணி

06/Feb/2021 09:56:22

ஈரோடு, பிப்:ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருப்பதை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐ.எம்.ஏ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

 இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் கடந்த 1-ஆம் தேதி முதல் ஐ.எம்.ஏ சார்பில் தனியார் மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு வாகன பேரணி துவங்கப்பட்டது. 

இந்த வாகன பேரணி ஓசூரில் துவங்கி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்தது.  இதையடுத்து ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வாகன பேரணி துவங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணியில், ஈரோடு ஐ.எம்.ஏ. கிளை தலைவர் பிரசாத் தலைமை வகித்தார். தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

பேரணியானது, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக, அரசு மருத்துவமனை, ஈ.வி.என். ரோடு, ரயில்வே ஸ்டேஷன், காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம், சோலார், கொடுமுடி, சிவகிரி வழியாக கரூர் மாவட்டத்தில் நிறைவடைந்தது. 

இதில், ஐ.எம்.ஏ. கிளை பொருளாளர் சுதாகர், துணை தலைவர் விஜயகுமார் தம்பிராஜன், செயலாளர் செந்தில்வேலு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சக்ரவர்த்தி, சுகுமார், டாக்டர் அபுல்ஹசன் மற்றும் கோபி, சத்தி, பவானி, குமாராபாளையத்தை சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Top