logo
ஈரோட்டில் இதுவரை 2,620 பேருக்கு கொரோனா தடுப்பூசி... தனியார் மருத்துவமனையிலும்  ஊசி போட நடவடிக்கை

ஈரோட்டில் இதுவரை 2,620 பேருக்கு கொரோனா தடுப்பூசி... தனியார் மருத்துவமனையிலும் ஊசி போட நடவடிக்கை

31/Jan/2021 07:06:00

ஈரோடு, ஜன: இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16 -ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் கீழ் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை அரசு, தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 13,800 கோவிஷீல்டு டோஸ்கள் வந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் நேற்று வரை 2620 முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷுல்டு போடப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 181 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தது. தற்போது அது பற்றிய அச்சம் விலகி உள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.தற்போது முதற்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாளை முதல் போலீசார் உள்பட  பிறர் துறையைச் சேர்ந்த முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை அரசு மருத்துவமனை,சுகாதார மையங்களில்  மட்டுமே போடப்பட்டு வந்தது. நாளை முதல் தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட தயாராக உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் தனியார் ஆஸ்பத்திரிகளில் பட்டியல் வரும். அதன் பிறகுதான் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் என தெரிய வரும் என்றார்

Top