logo
பொங்கல் பரிசு: கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தது முறையா... திருமாளவன் கேள்வி

பொங்கல் பரிசு: கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் அறிவித்தது முறையா... திருமாளவன் கேள்வி

21/Dec/2020 12:03:42

 சென்னை: கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு ரூ.2500/- வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தது முறையா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் சார்பில் தேர்தல் பரப்புரையைத் துவக்கிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500/-  வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதல்வராக செய்ய வேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் செய்வது முறையா? இது அப்பட்டமான விதிமீறலாகும். இது மக்களுக்கான நலத் திட்டமா? அல்லது  வாக்குகளுக்காக வழங்கப்படும் முன்பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

புயலாலும் மழை வெள்ளத்தாலும் பாதிப்புக்கு ஆளாகி லட்சக் கணக்கான மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். எனவே, புயல்-மழை வெள்ள நிவாரணத்தை உடனே அறிவிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.

வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். அத்துடன், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களில் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் ரூபாயும் மற்ற பகுதிகளில் வாழ்வோர் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஐந்தாயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, புயல் வெள்ள நிவாரண நிதியைப் போதிய அளவில் தமிழகத்துக்கு உடனே விடுவிக்க வேண்டும். அதற்காகத் தமிழக அரசு  தனது கூட்டாளியான பாஜக அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தரவேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

 


Top