21/Nov/2020 10:03:14
சென்னை: இது குறித்து கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
இந்த ஆண்டு நீட் தேர்வினுடைய பாதிப்பை குறைக்கின்ற வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் குறைவாக இருக்கிறது.
ஆனால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் தகுதிக்கு மீறியதாக கட்டணங்கள் இருக்கின்றன. மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் மருத்துவ படிப்பை கைவிட வேண்டிய கட்டாயத்திலும் வேதனையிலும் அந்த மாணவர்களும் பெற்றோர்களும் இருந்தார்கள். யாராவது உதவி செய்வார்களா என்ற கோரிக்கைகளையும் ஊடகங்கள் வாயிலாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த மாணவர்களின் வேதனை குரலை மனிதாபிமானத்தோடு ஆராய்ந்து அனைவருக்குமான கட்டணத்தை திராவிட முன்னேற்ற கழகம் செலுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மருத்துவ கனவை நனவாக்கி இருக்கிறது.
சரியான நேரத்தில் கட்டணத்தை கட்டுவோம் என்ற அறிவிப்பை செய்து மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், அதன் தலைவருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.