logo
புதிய கார் வாங்கும் போது கார் ஷோரூமில் காருக்கு இன்ஸ்சுரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை

புதிய கார் வாங்கும் போது கார் ஷோரூமில் காருக்கு இன்ஸ்சுரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை

16/Nov/2020 10:01:26

ஒருவர் புதிய கார் வாங்கி இருக்கிறார். 15.20லட்சம் விலையுள்ள காருக்கு 73,000 ரூபாய் இன்சூரன்ஸ் என்று இன்வாய்ஸில் போடப்பட்டிருப்பதைக் கண்டு இது அதிகமாக இருக்கிறதே என்று தனது இன்சூரன்ஸ் துறையில் இருக்கும் தனது நண்பரிடம் விவரம் கேட்டிருக்கிறார். 12 லட்ச ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட அந்த பிரீமியம் அதே கவரேஜ் (பம்பர் டு பம்பர்) 53,000 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று அவரது நண்பர் கூறியதைக் கேட்டு இவருக்கு அதிர்ச்சி.

ஆயிரம், இரண்டாயிரம் என்றால் பரவாயில்லை சொளையாக 20,000 ரூபாய் என்றதும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார். கார் புக் செய்த ஷோரூமின் சேல்ஸ் மேனேஜரிடம் ஏன் இன்சூரன்ஸில் இவ்வளவு வித்தியாசம் என்று கேட்டதற்கு எங்க இன்சூரன்ஸ்ல எல்லாம் கவர் ஆகிடும், மத்ததுல ஆகாது என்று சின்னதா இருக்கசொல்ல உறிச்ச கோழி நீங்க சொல்றது, அதே கோழி பெரிசா இருக்கசொல்ல உறிச்சது நாங்க சொல்றது என்று அவர் பதில் அளிக்க, மீண்டும் தனது இன்சூரன்ஸ் நண்பரிடம் தொடர்புகொண்டு மீண்டும் விளக்கம் கேட்க, அவரோ ரெண்டுமே ஒரே கோழிதானே என்ற விளக்கத்தை அளித்திருக்கிறார். சேல்ஸ் அதிகமாக்க டீலர்கள் செய்யும் டகால்டியே தவிர்த்து வேறு எதுவும் இல்லை, நீங்கள் நோண்டி நொங்கெடுப்பதாக இருந்தால் அவர்களிடம் இல்லாமல் வெளியே இன்சூரன்ஸ் வாங்கிக்கொடுக்க நான் உதவுகிறேன் என்று நண்பர் சொல்லி இருக்கிறார்.

அன்பருக்குக் குழப்பம் தீரவில்லை. மோட்டர் வாகனச் சட்டம் என்ன சொல்கிறது என்று தேடிப்படித்தார். சட்டத்தில் வாடிக்கையாளரை எங்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது, அது வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.

சரி என்று சம்பந்தப்பட்ட கார் விற்பனையகத்தின் CRM தொடர்புகொண்டு கேட்டதற்கு, நீங்கள் எங்களிடம்தான் கார் வாங்குகிறீர்கள் எனவே எங்களிடம்தான் இன்சூரன்ஸ் போடவேண்டும் என்று பதில் வந்திருக்கிறது. ஆனால், மோட்டர் வாகனச் சட்டத்தில் நீங்கள் இப்படி ஒரு வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறதே? அதன்படி நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்த முடியாதே என்று இவர் திருப்பிக்கேட்க , மறுமுனை சைலண்ட் ஆகி, இருங்கள் தகுந்த நபரைப் பேசச் சொல்கிறேன் என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

வழக்கம்போல கார்பொரேட் விதிமுறைப்படி அன்பரின் புகார் கிடப்பில் போடப்பட, அன்பர் எல்லாவற்றையும் பதிவுசெய்ய முடிவெடுத்து மெயில் அனுப்பத் துவங்கினார். அதற்குள்ளாக கார் டெலிவரி நேரமும் நெருங்க ஆரம்பித்து , வண்டி எப்ப டெலிவரி எடுக்கப் போறீங்க என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். 20,000 அதிகம் கட்ட மனதில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை யோசித்திருக்கிறார் அன்பர்.

டெல்லியிலுள்ள கார் கம்பெனியின் கஸ்டமர் கேர் எண்ணிற்குத் தொடர்புகொண்டு இதைப் பற்றிக் கேட்க, அவர்களோ நாங்கள் நிச்சயம் கஸ்டமரை எங்களிடம்தான் இன்சூரன்ஸ் வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கமாட்டோம், இது தவறு என்று பதிலளித்திருக்கிறார்கள். கூடவே அன்பர் அளிக்கும் புகார் சரிதானா என்று விசாரிக்க அவரிடம் இன்சூரன்ஸ் எங்களிடம்தான் போடவேண்டும் என்று வலியுறுத்திய சேல்ஸ் மேனேஜரையும் கான்பிரன்ஸ் காலில் அழைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.

நண்பர் உடனே சேல்ஸ் மேனேஜரை கான்பிரன்ஸ் கால் போட்டு அந்த சேல்ஸ்மேனேஜரிடம் பேசத் துவங்கினார். டெல்லி அலுவலகம் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் முதலிலிருந்து கதையை ஆரம்பிக்க. அவரோ கூலாக இதெல்லாம் இந்தக் கார் கம்பெனி பாலிஸி, நீங்கள் எங்களிடம் இன்சூரன்ஸ் எடுத்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும், இல்லைன்னா உங்களுக்குத்தான் பிரச்னை என்று ஏகத்துக்கும் அடித்துவிட, மறுபக்கத்திலிருந்து எத்தினி நாளா கூழ் ஊத்தற? அதென்ன கம்பெனி பாலிஸி அது எங்கே? நம் கம்பெனியின் எந்த டாக்குமெண்டில் இருக்கிறது? என்று டெல்லி கம்பெனி கஸ்டமர் கேர் இடைமறித்துக் கேட்க பிரச்னையின் தீவிரம் சேல்ஸ் மேனேஜருக்கு உரைத்திருக்கிறது. இந்த டிவிஸ்டை அவர் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான அப்பாவி ஆமாம் சாமி கஸ்டமர்களைப் போல நினைத்து அள்ளிவிட்டது தவறு என்று மாட்டிக்கொண்டார்.

அந்தர் பல்டி அடித்து வாடிக்கையாளரே எங்கள் உயிர் மூச்சு அதை இன்சூரன்ஸ் மேல் விடமாட்டோம் என்று சமாளித்து வெளியே அன்பர் விருப்பப்பட்ட இடத்தில் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள உதவுகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். அதன்படி இன்சூரன்ஸை வெளியே எடுத்து ரூ.20,000 சேமித்திருக்கிறார் அன்பர்.

இதைப் பற்றி தனது உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் பேசியபொழுது ஒருவருக்கும் இதுபோன்று இன்சூரன்ஸ் வெளியே நாமே விசாரித்து எடுக்கலாம் என்பது தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்திருக்கிறது. இந்த ப்ராடுத்தனத்தைப் பற்றி முழுவதுமாக ஆராய்ச்சி செய்யத் துவங்கினார்.அனைத்து ப்ராண்ட் கார்களிலும், இன்சூரன்ஸ் என்பது கார் விற்பனை விலையுடன் வரும் பாக்கேஜாகவே பலரும் நம்பிக்கொண்டுள்ளனர் என்பதும் அவருக்குத் தெரிந்து அதிர்ச்சியாகிறார்.

இந்தியாவில் 2017 ல் சுமார் 32 லட்சம் கார்கள் விற்பனையாகி இருக்கிறது. ஆவரேஜாக 10,000 ரூபாய் அதிகம் வைத்து ஒவ்வொரு காருக்கும் இன்சூரன்ஸ் விற்கப்பட்டிருந் தாலும் மக்கள் தங்கள் அறியாமைக்குத் தந்த விலை சுமார் 320 கோடி ரூபாய்கள். .அதாவது மாதம் 26 கோடி ரூபாய்கள். கார் விற்பனைக்கு மட்டுமே இந்தக் கணக்கு. லாரி, பஸ், விவசாய வாகனங்கள், டூவீலர்கள் போன்றவைகளையும் கணக்கெடுத்தால் மாதம் லவுட்டிய தொகை எவ்வளவு வருமென்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தால் குமாரசாமிகளுக்கே நெஞ்சுவலிக்கும் என்கிறார்  மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து-(ABGP) (ALL INDIA CONSUMER PROTECTION MOVEMENT-REGD NO.S-9194/1974 DELHI)  எம்.சரவணக்குமார்.

Top