logo
பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறது: தேசிய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு

பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறது: தேசிய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு

28/Oct/2020 11:40:11

ஈரோடு: பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு வருவதாக தேசிய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனை தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் இன்று(அக்.28) நடைபெற்றது. இதில், தேசிய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டார்.

முன்னதாக சஞ்சய் தத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பீகார் மாநிலத்தில் பாஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார், ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் வேலை வாய்ப்புகளை தருவதாக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். பீகாரை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும்.

நாட்டில் கொரோனா நோய் தொற்று பிரச்சனை, ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் தொழிற்சாலைகளையும், கடைகளையும் மூடும் நிலை, வேலை இல்லா திண்டாட்டம் போன்ற எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில், மலிவான விளம்பரத்தை பாஜ தேடி வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசும், பாஜ.,வினரும் மக்களிடம் தவறான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளதால், நம்ப மாட்டார்கள். 

தமிழகத்தில், கடந்த மக்களவை தேர்தல்லில் திமுக கூட்டணி எப்படி மாபெரும் வெற்றி பெற்றோதோ, அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். பாஜ அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி கொள்கை, பெட்ரோல் டீசல் விலை உயா்வு, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிதாக வேளாண் சட்ட மசோதாவை இயற்றியுள்ளனர். இச்சட்டம் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் எதிரானது. அதனால், தான் காங்கிரஸ் சார்பில் இச்சட்டத்தை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

பாஜ தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான செயல்பட்டு வருகிறது. அதிமுக அவர்களது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக பாஜக வினரிடம் அமைதி காத்து வருகின்றனர். இதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். இதனால், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று  சஞ்சய் தத் கூறினார். 

                                                                               

        


Top