16/Oct/2020 09:48:25
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளில் நிறுவப்படும் கொதிகலன்களுக்கு (பாய்லர்) பொதுப்பணித்துறை கொதிகலன் பிரிவில் அனுமதி பெறப்பட வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை கொதிகலன் உறுதித்தன்மை குறித்து சான்று வழங்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி வழங்குவதற்கும் புதுப்பிக்கவும், பொதுப்பணித்துறையினர் ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் 4 அரிசி ஆலைகளில் கள ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது லஞ்சம் பெறப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து டிஎஸ்பி திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரேகா மற்றும் போலீஸார் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் தளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன்(50) புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார்(45) ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஈரோடு சங்குநகரில் உள்ள உதவி இயக்குநர் மகேஷ்பாண்டியன் வீட்டில் நேற்றிரவு டிஎஸ்பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரொக்கம் ரூ.66 ஆயிரமும் மேலும் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முதல்கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும், கைப்பற்றப்பட்டுள்ள மற்ற சொத்து ஆவணங்களின் மதிப்பு குறித்து போலீசார் தொடர்ந்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உதவி இயக்குனர் மகேஷ் பாண்டியன் சொந்த மாவட்டம் தேனி என்பதால் அங்கு உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் எவ்வளவு ரூபாய் , ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த உண்மையான விவரம் தெரியவரும். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.