15/Sep/2022 09:10:31
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் உள்ள வாகன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடகாடு பெரியகடைவீதியில் உள்ள வாகன விநாயகர் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் இருதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை காலை மேளதாளங்கள், வானவேடிக்கைகள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு,சிவாச்சாரியர் பிரபாகரன் தலைமையிலானோர் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை வடகாடு வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர். வடகாடு போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.