10/Aug/2021 12:51:01
ஈரோடு, ஆக: ஈரோடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்( 27). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ராமச்சந்திரன் மனைவிக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராமச்சந்திரன், ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். ஆனால் புகாரை பெற்றுக் கொள்ளாமல் போலீசார் அழைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கும் புகார் தெரிவிக்க வந்தார். ஆனால் அவரால் எஸ்.பி.யை நேரடியாக சந்திக்க முடியவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமச்சந்திரன் இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனக்குத்தானே ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அருகில் இருந்த பொதுமக்கள் போலீசார் அவரை தடுத்தனர். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கேயே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஈரோடு கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காட்சி அளித்தது.அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.