15/Jul/2021 12:58:15
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தி அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தகவல்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில்அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் புதன்கிழமை (14-7-2021) காலை 10.45 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 5 நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, வி.நர்மதா(11) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காகத் சுமதி(35), ஜோதி ( 35),அஸ்விதா (14), ஜீவிதா ( 14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றபோது, மேற்படி 5 நபர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.