logo
ஈரோடு ஜவுளி சந்தையில் பல மாதங்களுக்குப்பிறகு  களை கட்டிய  சில்லரை வியாபாரம்

ஈரோடு ஜவுளி சந்தையில் பல மாதங்களுக்குப்பிறகு களை கட்டிய சில்லரை வியாபாரம்

14/Jul/2021 01:57:36

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகர் பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 250 தினசரி கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் செயல்பட்டு வந்தன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி சந்தை உலகப் புகழ் பெற்றது. 

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பிகார், குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வார சந்தை நடைபெறும் நாளில் வந்து குவிவார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு அனைத்து வகையான துணிகளும் குறைந்த விலையில் விற்கப்படுவதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.குழந்தைகளுக்கான ரெடிமேட் சட்டை, இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கான சட்டைகள் குறைந்த அளவில் கிடைக்கின்றன.

 இந்த சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரையும் வர்த்தகம் நடைபெறும். ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக கனி மார்க்கெட் ஜவுளி சந்தை சில மாதங்கள் மூடப்பட்டது. இதனால் இதனை நம்பி இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியதால் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையை மீண்டும் கொரோனா 2-ஆம் அலை வேகம் எடுத்ததால் அந்த மே மாதம் 6-ஆம் தேதி முதல் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடப்பட்டது.

இதனால் மீண்டும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்கள் வாழ்வாதாரத்தை காக்க பெரும்பாலான ஜவுளி வியாபாரிகள் மாற்று வேலைக்கு செல்லத் தொடங்கினார். கட்டிட தொழில், செங்கல் சூளை போன்ற வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றினர். இந்நிலையில் மீண்டும் தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 5 ஆம் தேதி முதல் மீண்டும் ஜவுளி சந்தை செயல்படத் தொடங்கியது. ஆனால் வாரச் சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் மற்றும் இன்று 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மக்களும் ஆர்வத்துடன் வந்து துணிகளை வாங்கிச் சென்றனர். இதனால் நீண்ட நாள் கழித்து ஜவுளி சந்தையில் வியாபாரம் சகஜ நிலைக்கு வந்துள்ளது. இனி வரும் நாட்களில் ஜவுளி சந்தையில் வியாபாரம் களைகட்டும் ம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Top