04/Jul/2021 01:25:52
புதுக்கோட்டை, ஜூலை: பாராளுமன்ற தொகுதி மறு வரையறைக்கான ஆய்வு நடத்தப்படும்போது இழந்தபுதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி கட்டாயம் மீட்கப்படும் என்று உறுதியளித்தார் தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் அறிவிப்புக்கு முன்பு நகர பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கடைகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
நீட் தேர்வு விவகாரத்தில் நாடகம் ஆட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளது, அதற்காகத்தான் மக்கள் இடத்திலேயே கருத்துகள் கேட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரையை ஏற்று அதனடிப்படையில் தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு தாருங்கள் என்றுதான் கேட்கப் போகிறோம். நீட் வேண்டாம் என்று கேட்கவில்லை. நீட் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை கொடுக்கின்ற அத்தனை விஷயங்களையும் சட்டத்துறை வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தில்லி செல்ல இருக்கிறார் அவர் சென்று திரும்பியவுடன் இதற்கான விடை கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. கடந்த முறை பறிபோன புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி இந்த முறை மறுசீரமைப்பின் போது கட்டாயமாக மீட்டெடுக்கப்படும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.