logo
ஈரோட்டில் 213 டாஸ்மாக் கடைகள் 5--ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி: தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோட்டில் 213 டாஸ்மாக் கடைகள் 5--ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி: தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

03/Jul/2021 05:58:07

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில்  உள்ள  213 டாஸ்மாக் கடைகள் 5--ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளதால்  கடைகளில் முன்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ 3 கோடி முதல் 4 வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் பண்டிகை விசேஷ காலங்களில் ரூ. 10 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கியது. இதனால் நமது மாவட்டத்தை சேர்ந்த மது பிரியர்கள் அடுத்த மாவட்டத்திற்கு சென்று மது வாங்கி வந்தனர்.

ஆனால், ஈரோடு, கோவை உட்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியதால் பல்வேறு தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏறத்தாழ  2 மாதங்களுக்கு பிறகு ஈரோட்டில் வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 213 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மது பிரியர்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப் பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம்  வரையப்பட்டு  வருகிறது.

மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்திலுள்ள 128 பார்களும் வழக்கம் போல் மூடப்பட்டிருக்கும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மதுக்கடைகள் செயல்பட உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Top