06/Apr/2021 05:49:43
புதுக்கோட்டை, ஏப். 6- புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1902 வாக்குச்சாவடி மையங்களின் (ஏப்ரல்6) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது.
6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13 லட்சத்து 52ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர்.
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை 10 மணிக்கு மேல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் கூட்டம் அலைமோதியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 66 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு:
புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி அரசு பிரஹதாம்பாள் மேனிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்களித்தார்.
புதுக்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா அன்னசத்திரம் ஊராட்சிப்பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் அரசு மகளிர் கல்லூரியில் வாக்களித்தார். தி்ருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து தனது குடும்பத்தினருடன் விராச்சிலை பெரி.மெ. மெய்யப்பசெட்டியார் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி புதுக்கோட்டை ராணியார் அரசு உயர்நிலைப்பள்ளியயில் வாக்களித்தா விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் இலுப்பூரில் உள்ள பள்ளியிலும், திமுக வேட்பாளர் பழனியப்பன் தென்னலூரிலும் வாக்களித்தனர். கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம். சின்னத்துரை தொகுதிக்கு உட்பட்ட புனல்குளம் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
ஆலங்குடி திமுக வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதன் மரமரடக்கி அரசு மேனிலைப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் தர்மதங்கவேல் வடகாடு அரசு மேனிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். இதைப் போல் அறந்தாங்கி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி. ராமச்சந்திரன் தீயத்தூரிலும், அதிமுக வேட்பாளர் மு. ராஜநாயகம் அறந்தாங்கி பள்ளியிலும் வாக்களித்தனர்.