logo
ஈரோட்டில்  2 -ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

ஈரோட்டில் 2 -ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

13/Feb/2021 02:11:43

ஈரோடு, பிப்:இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16 -ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் கீழ் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் அரசு, தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டாவது கட்டமாக பிற துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதன்படி வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

 கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுதா, லோட்டஸ் ஆகிய தனியார் மருத்துவமனை களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  வெள்ளிக்கிழமை வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 4312 முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இதையடுத்து நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி 16 -ஆம் தேதி 5 மையங்களில்  டாக்டர்கள் செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள்  என 78 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட 28 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.  அந்த வகையில் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட ஆரம்பித்து இன்றுடன் 28 நாட்கள் ஆகிறது. இதையடுத்து இன்று முதல் ஈரோட்டில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. இதில் டாக்டர்கள் செவிலியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது. 

தற்போது வரை முன் கள பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்னும் சில நாட்களில் பொதுமக்களில் வயதானவர்கள், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Top