logo
தருமபுரி அருகே கண்டெய்னர் லாரி ஏற்படுத்திய விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலி

தருமபுரி அருகே கண்டெய்னர் லாரி ஏற்படுத்திய விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலி

13/Dec/2020 07:30:09

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலை கணவாய் பாலத்தில் சிமெண்ட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி முன்னால் சென்ற 11-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய கோர விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, மிகவும் தாழ்வாக அமைந்துள்ள தொப்புர் கணவாய் பாலத்தைக் கடக்கும்போது சிமெண்ட் பாரம் தாங்காமல் லாரியின் பிரேக் பழுதானதாகக் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகனம் மீது மோதி இழுத்துச் சென்றுள்ளது, அதே நேரம் சாலையின் வலது ஓரமாக சென்று கொண்டிருந்த 12 கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை லாரியின் கண்டெய்னர் பகுதி, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் நசுக்கியவாறு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டன.இதில் கார்கள் உருக்குலைந்து போயின.

இவ் விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், சாலையில் உருகுலைந்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இப்பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ள கண்டெய்னர் லாரியின் ஓட்டுனரை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, விபத்து குறித்து சரியான விசாரணை நடத்தப்படும் எனவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Top