02/Nov/2020 08:50:13
ஈரோடு மாவட்டம், தாளவாடியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் முத்துக்குமார்(21). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்துக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முத்துக்குமார் நேற்று நள்ளிரவு ஈரோட்டில் இருந்து பெருந்துறைக்கு அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பெருந்துறை சாலை திண்டல் அடுத்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மண்பரப்பில் சறுக்கி நிலை தடுமாறி முத்துக்குமார் சாலையில் விழுந்தார்.
இதில், முத்துக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருகிலிருந்தோர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.