21/Oct/2020 09:03:42
புதுக்கோட்டை: காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக்காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959 -ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 21 -ஆம் தேதி ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்படை போலீஸார் 10 பேர் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்தக் காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், நாடு முழுதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதில், கடந்த 1.9.2019 முதல் 31.8.2020 வரை காவல்துறையில் கடமையாற்றும் போது தமிழகம் உள்பட நாடு முழுதும் இதுவரை உயிர் நீத்த 264 போலீஸாருக்கு காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், கூடுதல் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில், நகர காவல்துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர், அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை உள்பட பல்வேறு கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் ஆயுதப்படை ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.