logo
ஈழத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல்நடைபெற்றது

ஈழத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவேந்தல்நடைபெற்றது

20/Oct/2020 09:34:14

ஈழத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை (அக்.19) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில், நிமலராஜனின் உருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனைத்தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார். 

பின்னர், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன், ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள். போர் சூழலில் யாழில் இருந்து துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். இவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்றவற்றில் பணியாற்றி இருந்தார்.அந்நிலையில். கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த வேளை இவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை காகிதத்திழன் மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

வவுனியாவில் நினைவஞ்சலி

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் (அக்.19) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில், வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அன்னாரது உருவப்படத்திற்கு அஞ்சலி சுடரினை சிரேஷ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் ஏற்றி, மலர் மாலையும் அணிவித்தார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையினை பொ.மாணிக்கவாசகம் நிகழ்த்தியிருந்ததுடன் நன்றியுரையினை ஊடகவியலாளர் ந.கபிலநாத் தெரிவித்தார். 


Top