17/Oct/2020 01:39:40
சென்னை:ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தற்போது இருக்கும் விரல் ரேகை பிரச்சினை தீரும் வரை பழைய முறையை பின்பற்றலாம் என்று உணவுத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
புதிய திட்டம்: இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற புதிய திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு கருவி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவு கருவி சர்வருடன் இணைப்பு கிடைக்காததால் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். இதனை தொடர்ந்து ஏற்கனவே இருந்த பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) எந்திரம் கொண்டே தற்போது பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எந்திரத்தில் தற்போது தொழில்நுட்ப கோளாறு எழுந்துள்ளது.
சர்வர் பிரச்சினை:ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ். எந்திரங்களில் அடிக்கடி ‘சர்வர்’ கிடைக்காமல் கோளாறு ஏற்படுகிறது. சர்வர் கோளாறு பிரச்சினையால் நுகர்வோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் போகிறது. இதனால் பல சமயங்களில் வரிசையில் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் ஆத்திரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலையும் ஏற்படுகிறது.
சில கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக ஒருவருக்கு பொருட்கள் வினியோகம் செய்யவே ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஆகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் கடும் அதிருப்தி அடைகிறார்கள். உரிய நேரத்தில் பொருட்கள் கிடைக்காமல் போகவே தினந்தோறும் ரேஷன் கடை ஊழியர்கள் - பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு: இந்த நிலையில், ரேஷன் கடைகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட விரல் ரேகை பதிவு என்ற ‘பயோமெட்ரிக்’ முறையில் பொருட்கள் வழங்குவதில் உள்ள சிக்கல் தீரும் வரை, முன்பிருந்த முறைப்படியே பொருட்களை வழங்கும்படி ஊழியர்களுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பழைய நடைமுறை: அதன்படி, 1-ஆம் தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்த மின்னணு அட்டை அடிப்படையிலான பொருட்கள் வழங்கும் பழைய நடைமுறையையே தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப சிக்கல் தீர்ந்ததும் மீண்டும் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும் என்றும் உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.